Monday, August 4, 2014

ஏதோ ஒன்று

நாலாம் தெரு ஜோதிமணியின்
சாவுக்குப் போயிருந்தபோது
அவளைப் பார்க்க முடிந்தது.
பேச முடியவில்லை.
மூக்கைச் சீந்தி அழுத முகத்தையே
உற்றுப் பார்த்தேன்.
அவளும் பார்த்தாள்
அவ்வப்போது.
கண்கள் சந்தித்த வேளையில்
தடுமாறிய முன்னாள் காதல்.
பூரித்து உப்பியிருந்த உடலில் மின்னிய

வடச் சங்கிலிகளும் வளையல்களும்
இந்நாள் நிறைவாழ்வைச் சொல்லின.
தேய்ந்து பிய்ந்து

நிறம் போன செருப்பை
உட்கார்ந்திருந்த பெஞ்சின் அடியில்
தள்ளி மறைத்தேன்.
கணவன் காட்டிய

கண்களின் பாஷை புரிந்து
பொங்கிய அழுகையை
ச்
சட்டென நிறுத்தியெழுந்து
குழந்தையுடன் பின்சென்றாள்.
ஜோதிமணியின் பிணத்துக்குப் பக்கத்தில்

செத்துக்கிடந்த ஏதோ ஒன்றை
உற்றுப் பார்த்தேன்.

No comments:

Post a Comment